இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே தேர்தலுக்கான ஆயத்தங்கள், பரபரப்புகள் கட்சிகளில் தெரிய ஆரம்பித்துவிட்டன. பத்திரிகைகளும், ஊடகங்களும் அரசியல் கட்சிகளுக்கு சளைத்தவர்களா நாங்கள் என, தேர்தலில் யார் வெற்றிபெறுவார், எந்தக் கூட்டணி, எத்தனை சதவிகித வாக்குகள் வாங்கும் என கருத்துக் கணிப்புகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன.
மதுராந்தகத்தில் பிரதமர் மோடி மேடை யில் ஏறி, தேசிய ஜனநாயகக் கூட்டணியை அறிவித்து, கூட்டணிக் கட்சியினருடன் மேடையில் தோன்றிய புகைப்படம் வெளி யாவதற்கு முன்பாகவே தேசிய ஜனநாயகக் கட்சி எத்தனை சதவிகிதம் வாக்கு வாங்கும் என்ற கருத்துக் கணிப்புகள் கிளம்பிவிட்டன.
அதில் சில கருத்துக் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் 38% வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடிக்குமென கூறுகிறது. தி.மு.க. 33 சதவிகித வாக்குகளுடன் அடுத்த இடத்தையும், த.வெ.க. 22% வாக்குகளையும் பெறுமெனக் கூறுகிறது.
அதாவது, கடந்த நாடாளுமன்றத் தேர் தலின்போது பா.ஜ.க. பெற்றதாகக் கூறப்படும் 18.5, அ.தி.மு.க.வின் 20 சதவிகித வாக்குகளைக் கூட்டி தற்போது 38 சதவிகித வாக்குகள் வாங்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். மாறாக, அதே நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்தியா கூட்டணி என்ற பெயரில் களமிறங்கிய தி.மு.க. பெற்ற வாக்கு சதவிகிதம் 47%. இப்போது அதே கூட்டணி 33% வாக்குகள்தான் பெறுமாம். தவிரவும் முதல்வர் ரேஸில் ஸ்டாலினை, எடப்பாடி முந்துவதாக வும் கணித்திருக்கிறது.
தி.மு.க. கூட்டணிக்கு 13% வாக்குகள் குறையுமளவுக்கு என்ன நடந்திருக்கிறது?
ஒருவேளை விஜய்யின் வருகையால் வாக்கு சதவிகிதம் மாறுமென்றாலும், அது இருதரப்பிலும்தானே பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியெதுவும் நடைபெறாமல் தி.மு.க. கூட்டணியில் மட்டும் 13% வாக்குகள் எப்படி குறையும்?
தவிரவும், சமீபத்தில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர். சிறப்புத் தீவிர திருத்தத்தில் 97.28 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அதன்பிறகு வெறும் 13 லட்சம் பேரே பெயர் சேர்க்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆக, ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கையிலேயே பெரும் மாறுதல் வந்திருக்கிறது. இந்த 13 லட்சம் பேர் சேர்க்கப்பட்டாலும், ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 97 லட்சம் பேர் குறையப் போகிறார்கள். ஆக, குறையும் 1 கோடி வாக்கு களால் கட்சிகளுக்கு விழும் வாக்கு சதவிகிதத்திலேயே கணிசமான மாற்றமிருக்கும் என்பது உறுதி. அது எதையும் கணக்கிலெடுக் காது வரும் கருத்துக் கணிப்பு எத்தகையதாக இருக்கும்?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க., தினகரன், அன்புமணி, ஓ.பி.எஸ்., வாசன் உள்ளிட்டோரின் வாக்கு 18.5 சதவிகிதமா என்பதில் சிலர் ஐயம் கிளப்புகிறார்கள். பா.ம.க. தரப்பு இரு அணிகளாகி நிற்பதால் எந்தத் தரப்புக்கு எத்தனை சதம் வாக்குகள் விழுமென்பது கேள்விக்குறி. ஓ.பி.எஸ். தேசிய ஜனநாயக் கூட்டணியில் வருவாரா இல்லையா என்பது உறுதியாகவில்லை. வந்தாலும் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் என அவரது அணியிலுள்ள பலர் கட்சி மாறியிருக்கும் நிலையில் அதில் பலத்த சேதாரம் இருக்கத்தான் போகிறது. தினகரன் சேர்க்கப்பட்டு, சசிகலா அந்தரத்தில் விடப்பட்டிருப்பதால் அவரது ஆதரவாளர்கள் தே.ஜ.கூ.வை விரும்புவார்களா என அடுக்கடுக்காக கேள்விகள் இருக்கின்றன.
அதேபோல, தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு விழும் வாக்குகள் ஒருபுறம் இருக்கட்டும். அந்தக் கூட்டணியே வலிந்து கட்டப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்றும் சிலர் அபிப்ராயப்படுகிறார்கள். எடப்பாடியுடன் கூட்டணியை விரும்பாத தினகரன், அந்நியச் செலாவணி வழக்கின் காரணமாக பா.ஜ.க.வை மீறமுடியாமல் இருக்கிறார். மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி பெற்றுத் தந்த வழக்கின் லகானை கையில் வைத் திருப்பதால் அன்புமணி சிக்கிக்கொண்டி ருக்கிறார். இதேபோல கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளின் கோப்புகளால்தான் அ.தி.மு.க., பா.ஜ.க.வின் உத்தரவை மீறமுடியாமல் இருக்கிறது. ஆக, அச்சுறுத்தலின் அடிப்படையில் கட்டப்பட்ட கூட்டணி எப்படி இயல்பானதாக இருக்கும் என இவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஆக, இப்படி முழுமனதுடன் இல்லாமல் அரைமனதுடன் கூட்டணியில் பிணைக்கப் பட்டவர்களின் தேர்தல் செயல்பாடுகள் எப்படியிருக்கும் என்ற கேள்வியெழுகிறது.
தவிரவும், ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க. வெற்றிபெறுகிறதோ… இல்லையோ,… ஊடகங்களின் மூலம் தங்களது தரப்பே பலமாக இருக்கிறது என்ற கதையாடலை ஆதரவுத் தரப்பு ஊடகங்களின் மூலம் நிலைநிறுத்த முயலும். அதன்மூலம் வாக்காளர்களின் மனநிலையில் செல்வாக்கு செலுத்தலாம் என்ற யோசனைதான் அது. அதற்கான தயாரிப்பே இந்தக் கருத்துக்கணிப்புகள் என்கிறார்கள் பா.ஜ.க.வின் வியூகமறிந்தவர்கள்.
இந்நிலையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும் என்.டி.ஏ. கூட்டணியே வெல்லும். தமிழகத்தில் 45% வாக்குகளுடன் தி.மு.க. தலைமையிலான கூட்டணியே 38 இடங்களை வெல்லும் என இந்தியா டுடே -சி வோட்டர் கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
உண்மை நிலவரம் இப்படியிருக்க, "கருத் துக்கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு செய்யும் அரசியல் உத்தியை ஒன்றிய அரசின் ஆதரவு நிறுவனங்கள் ஆரம்பிச்சுட்டாங்கய்யா' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!
______________
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/02/survey-2026-02-02-15-41-11.jpg)